இந்தோனேசியாவின் சூகர்ணோ-ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மலேசிய விமானியை நேரில் சந்தித்து சட்ட உதவிகளை வழங்க ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் இந்தோனேசிய அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது.
இந்தோனேசியாவின் சட்ட நடைமுறைகளை மதிப்பதாகத் தெரிவித்துள்ள மலேசிய தூதரகம், கைது செய்யப்பட்டுள்ள 39 வயது மலேசிய பிரஜைக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்க அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இன்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை 29 அன்று விமான நிலையத்தின் 3-ஆவது முனையத்தில் சோதனை செய்தபோது, அந்த மலேசிய விமானியின் பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 13.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 25 கிலோ எக்ஸ்டசி போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் மெத்தாம்பேட்டமைன், ஆகியவை இந்தோனேசியப் பாதுகாப்புப் படையினரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டன.








