கோம்பாக், ஜூலை 9-
டிக் டாக் சமூக ஊடகத்தில் இணைய பகடிவதை மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொண்ட ஈஷா என்ற ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் மேலும் இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த இரண்டு நபர்களும் அடையாளம் காணப்பட்ட போதிலும், அவர்கள் விரைவில் பிடிபடுவதற்கான சாத்தியம் இருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவித்தது.
ஈஷாவின் மரணத்திற்கு பிறகு தேடப்படும் அந்த இரு நபர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. .
அந்த இரண்டு நபர்களுக்கு எதிராக செந்தூல் மாவட்ட போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஈஷா தற்கொலை தொடர்பில் அவரை அவமானப்படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்தியதாக நம்பப்படும் ரவாங்கை சேர்ந்த 35 வயது இந்தியப் பெண் நேற்று கைது செய்யப்பெட்டுள்ளார்.
பிடிபட்ட பெண்ணுடன் சேர்ந்த ஈஷாவிற்கு எதிராக அருவருக்கத்தக்க வார்த்தைகளை பிரயோகித்து, அந்த பெண்ணின் மரணத்திற்கு காரணமாக அமைந்த அந்த இரண்டு நபர்களை பிடிப்பது மூலம் ஈஷா மரண விவகாத்திற்கு தீர்வு காண முடியும் என்று போலீசார் நம்புகின்றனர்.
ஈஷா தற்கொலை தொடர்பில் ,ரவாங், புக்கிட் பெருந்துங் கோல்ஃப் ரிசார்ட், ஜாலான் செம்பகா 2- ஐ சேர்ந்த பெண்ணுக்கு எதிராக நிறைய போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும் அளவிற்கு நிறைய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலீசார் நம்புகின்றனர்.
தனக்கு எதிராக அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி டிக் டாக்கில் வெளியிடப்பட்ட காணொளியினால் அவமானத்திற்கும், பெரும் மன உளைச்சலுக்கும் ஆளானதாக கூறப்படும் கோலாலம்பூர்,தமன் மெலத்தி, கோம்பாக் சேத்தியா- PPR குடியிருப்பைத் சேர்ந்த 30 வயதுடைய ஈஷா என்ற ராஜேஸ்வரி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
ஈஷாவை டிக் டாக் வாயிலாக அச்சுறுத்தியது தொடர்பில் கடந்த ஜுலை 6 ஆம் தேதி 39 வயதுடைய நபர் போலீஸ் புகார் ஒன்றை செய்து இருப்பதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Ahmad sukarno குறிப்பிட்டு இருந்தார்.








