நைஜீரியாவில் 31 கிலோ கஞ்சா கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட அறுபத்து மூன்று வயது மலேசியப் பெண், தன் சொந்த மகளாலேயே சதித்திட்டத்தில் சிக்க வைக்கப்பட்டாரா என்பது குறித்து புக்கிட் அமான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்லாந்தில் இருந்து துபாய் வழியாக லாகோஸ் விமான நிலையத்தை வந்தடைந்த அந்தப் பெண்ணின் சூட்கேஸ்களில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையின் போது, தனது பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் தனது மகளே ஏற்றுக் கொண்டதாகவும், நைஜீரியாவில் ஒப்படைப்பதற்காக அந்த சூட்கேஸ்களைத் தன் மகள் தான் கொடுத்து அனுப்பினார் என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் அவரது மகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப்பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.








