பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக நாளை ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 158 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய ஹலிம் அமான், 'ஒப் சுத்ரா' நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணையில், குறிப்பிட்ட ஓர் அமைப்பின் தலைவர் தனது சொந்த நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல நூறு மில்லியன் ரிங்கிட் பொது நிதியை மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
இவ்வழக்கில் 40 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரின் 7 வீடுகள், 4 நிலங்கள், 19 ஆடம்பர வாகனங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்ட பல மில்லியன் மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த வாரம் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராகப் பணமோசடி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவுள்ளன என்று ஹலிம் அமான் விளக்கினார்.








