அரசாங்கங்களுக்கு இடையிலான ஜி2ஜி ஒப்பந்தங்கள் மூலம் ஆண்டுக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவிலிருந்து மூன்றாம் நாடுகளுக்கு மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டு வந்ததாகப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஈப்போவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜிபி., சம்பந்தப்பட்ட நாடுகளின் உள்நாட்டு நெருக்கடிகள் காரணமாகத் தற்போது இந்த மறுகுடியமர்த்தல் செயல்முறை முடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால் மலேசியாவிற்குள் அகதிகள் தங்கும் காலம் நீடித்து, பல்வேறு சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.
மலேசியாவில் உள்ள அனைவரும் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என வலியுறுத்திய ஐஜிபி, குற்றச் செயல்களில் ஈடுபடும் அகதிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
தற்போது மலேசியாவில் ஒரு லட்சத்து 26 ஆயரத்திற்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் அகதிகளுக்கான ஐ.நா. தூதரக அமைப்பில் பதிவு செய்துள்ளனர் என்றும் போலீசாரும், குடிநுழைவுத் துறையும் இவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காலித் இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.








