கோலாலம்பூர், அக்டோபர்.19-
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லையில் நீடிக்கும் பதற்றம் குறித்து மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். இப்போர் நிலை நீடித்தால், இரு நாடுகளின் மக்களும் மேலும் துயரடைவார்கள் என்றும், வட்டாரத்தின் அமைதி கேள்விக் குறியாகும் என்றும் அன்வர் தனது சமூக ஊடகப் பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதையொட்டி, அவர் நேற்று இரவு பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif, ஆப்கானிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் Mullah Mohammad Hassan Akhund ஆகியோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரச்சினைக்குத் தூதரக வழிமுறையிலும் பேச்சு வார்த்தை மூலமும் மட்டுமே அமைதியான தீர்வு காண முடியும் என்று வலியுறுத்தினார்.
மலேசியா, இவ்விரு நாடுகளின் அமைதி முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், குறிப்பாகக் கத்தார் அரசின் மேற்பார்வையில் நடைபெறும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறத் துணை நிற்கும் என்றும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதியளித்தார். மேலும், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஆகிய இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாந்தநேய உதவிகள் வழங்க அனைத்துலகச் சமூகத்துடன் இணைந்து மலேசியா செயல்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பிரதமரின் இந்த மாந்தநேய நடவடிக்கை, இஸ்லாமியச் சகோதரத்துவத்தையும் வட்டார நிலைத்தன்மையையும் நிலைநாட்டுவதற்கான மலேசியாவின் உறுதியான வெளிப்பாடு ஆகும். ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தையை வலியுறுத்திய அதே சமயம், மறுபுறம் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இரு நாட்டு மக்களுக்கும் அன்வார் ஆழ்ந்த இரங்கலையும், உதவிக் கரத்தையும் நீட்டியுள்ளார்.