முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் மகள் கிரிக்-ஜேலி-வைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போலீசார், விசாரணையை ஒருபோதும் கைவிடவில்லை என்று மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில், போலீஸுக்கு எதிராக இந்திரா காந்தி தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காலிட் இஸ்மாயில், அதனை செய்ய அவருக்கு சட்ட உரிமை இருப்பதாகக் கூறியுள்ளார்.
நீண்ட காலமாக நிலுவையிலுள்ள இவ்வழக்கு குறித்து இந்திரா காந்தியையும், அவருடைய வழக்கறிஞர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர்கள் வழங்கும் புதிய தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் காலிட் இஸ்மாயில் உறுதியளித்துள்ளார்.








