கோலாலம்பூர், டிசம்பர்.11-
மலேசியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த கோலாலம்பூர் – ஜோகூர் இடையிலான மின்சார ரயில் சேவையானது, இன்று வியாழக்கிழமை வெள்ளோட்டப் பயணமாக கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜோகூர் நோக்கிப் புறப்பட்டது.
நாளை அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்படவுள்ள இந்த ரயில் சேவையானது, ஜோகூர் பாரு, கெம்பாஸ் பாரு ரயில் நிலையத்தை அடையவுள்ளது.
ஜோகூர் Regent இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் நாளை நடைபெறவுள்ள ரயில் சேவைக்கான பணிகள் நிறைவு மற்றும் இயக்கத்திற்கான துவக்க விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
192 கிலோமீட்டர் கெமாஸ்-ஜோகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டைப் பாதை ரயில் திட்டத்தின் நிறைவைக் கொண்டாடும் விதமாக இன்று காலை 6 மணியளவில், கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய இரயில் சேவை நிறுவனமான கேடிஎம்பி மற்றும் போக்குவரத்து அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
6 பயணிகள் பெட்டிகளோடு, 312 பயணிகளுக்கான இருக்கைகளைக் கொண்ட இந்த ரயிலானது, 5 நடுத்தர மற்றும் 1 வர்த்தக வகுப்பு வசதிகளைக் கொண்டது.








