சபா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்திய மிகப்பெரிய கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட பத்து நபர்களில் டத்தோ அந்தஸ்தைக் கொண்ட போதைப்பொருள் கடத்தும் கும்பலின் தலைவனும் அடங்கும் என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் 36 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத்து சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டனர்.
புக்கிட் அமான் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் கிழக்கு சபா பாதுகாப்புப் பிரிவான Esscom ( எஸ்கோம் ) இந்த சோதனையில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கோத்தா கினபாலு, சபா கிழக்குரையோர கடற்பகுதி,தாவாவ் மற்றும் செம்போர்னா ஆகிய நான்கு பகுதிகளில் ஏகக்காலத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அயோப் கான் தெரிவித்தார்.
பிடிபட்ட டத்தோ அந்தஸ்தை கொண்ட நபர், சபா மாநிலத்தில் அரசாங்க சார்பற்ற அமைப்பின் ஒன்றின் காப்பாளராக பதவி வகித்து வருவதாக தெரியவந்துள்ளது என்று அயோப் கான் மேலும் விவரித்தார்.








