ஜோகூர் மாநிலம் குளுவாங்கில் மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட புதிதாகப் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை, மார்பில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதால் உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்ஷாத் வெளியிட்டுள்ள தகவலில், 19 வயதுடைய கல்லூரி மாணவரும் அவரது காதலியும் பெற்ற இரட்டைக் குழந்தைகளில் ஒன்று உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கருவைக் கலைப்பதற்காக தனது காதலிக்கு 450 ரிங்கிட் வழங்கியதாக சம்பந்தப்பட்ட மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், மாணவி பின்னர் மருத்துவமனையில் தனது இரண்டாவது பெண் குழந்தையை உயிருடன் பெற்றெடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அம்மாணவர் வரும் ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வரை விசாரணையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.








