தமிழகத்தில் அரசாங்க பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் யோசனையை தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
இந்த முன்மொழிவானது முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அ. ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மாநில பட்ஜெட்டுக்கு முன்னதாக, 80-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மதிய உணவின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களை ஈர்க்கவும் இந்த பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உடன் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், அரசாங்கம் இந்த யோசனையை சாதகமாகவே பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டங்களை 12-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும் என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளன.








