நாட்டின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி முறையான டிவெட்-ஐ உலகளாவிய அங்கீகாரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ஐந்து ஆண்டு அனைத்துலக செயல் திட்டத்தை மனிதவள அமைச்சு இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ‘திறன் மேம்பாட்டுத் துறை அனைத்துலக செயல் திட்டம் 2026-2030’ மற்றும் 'ஸ்கில்ஸ்மலேசியா குளோபல்' ஆகிய புதிய முன்முயற்சிகளை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தொடக்கி வைத்தார்.
மலேசியத் திறன் சான்றிதழை அனைத்துலக தரத்திற்கு நிகராக உயர்த்துவதே இதன் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்ட அவர், இத்திட்டம் நாட்டின் பொருளாதார சவால்களை முறியடிப்பதில் ஒரு முக்கிய 'கேம் சேஞ்சராக' விளங்கும் என்றார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வழிகாட்டுதலின்படி, டிவெட் பட்டதாரிகளை உயர்தரத் தொழில்துறைகளுடன் இணைக்கும் நோக்கில், மலேசிய ஏவியேஷன் குரூப் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இன்று கையெழுத்தாகின. அதேவேளையில் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் குறித்தும் டத்தோஸ்ரீ ரமணன் விவரித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ஏஐ தொழில்நுட்பம் மனித வேலைகளைப் பறிக்காது என்றும், மனித ஆற்றலுக்கு மாற்றே கிடையாது என்றும் தெரிவித்தார். மேலும், மலேசியாவின் தற்போதைய வேலையின்மை விகிதம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவாக 2.9 சதவீதமாகக் குறைந்துள்ள வேளையில், 'மைபியூச்சர்ஜாப்ஸ்' அகப்பக்கத்தில் இன்னும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளதாகவும், தகுதியானவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.













