கோம்பாக்கில் உள்ள இரும்புப் பட்டறை ஒன்றின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் இருந்து, 2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்கும் பல்வேறு அணிகளின் போலி ஜெர்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நடத்திய இந்த அதிரடி சோதனையில், சுமார் 375,000 ரிங்கிட் மதிப்புள்ள 10,500 போலி ஜெர்சிகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அந்தப் பகுதியில் வேலை செய்து வந்த 30 வயது மதிக்கத்தக்க மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வாரக் கண்காணிப்பிற்குப் பிறகு, வர்த்தக முத்திரை உரிமையாளர்களின் ஒத்துழைப்போடு இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கோலாலம்பூர் கே.பி.டி.என் இயக்குனர் முகமது சப்ரி செமான் தெரிவித்தார். உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ஜெர்சிகளின் தேவை அதிகரித்திருப்பதைப் பயன்படுத்தி, இந்த மோசடிக் கும்பல் ஒரு ஜெர்சியை 30 முதல் 50 ரிங்கிட் வரையிலான விலையில் இணையம் வழியாக விற்பனை செய்து வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலிப் பொருட்களை விற்பனை செய்வது நுகர்வோரை ஏமாற்றுவதோடு நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், 2019 வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.








