பத்துமலை திருத்தலத்தில் புதியதாக ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ மகா துர்க்கையம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம், வரும் நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்குள் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா முன்னிலையில் நடைபெறவிருக்கும் ஸ்ரீ மகா துர்க்கையம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேத்தை முன்னிட்டு இன்று நவம்பர் 15 ஆம் தேதி புதன்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீ விநாயகர் வழிபாடுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நாளை மறுநாள் நவம்பர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் இரவு வரை பக்தர்கள் தங்கம், வெள்ளி வைத்தல் நிகழ்வு நடைபெறும். நவம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு வரை பக்தர்கள் மூல விக்கிரத்திற்கு எண்ணெய் சாத்துதல் நடைபெறும்.
நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்ரீ மகா துர்க்கையம்மன் விமான திருக்குட நன்னீராட்டு பெருவிழா, தமிழகம், கும்பகோணம், பட்டிஸ்வரர் கோயில் சிவச்சாரியார் பாபு குருக்கள், தேவஸ்தானத்தின் இதர குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி முதல் நாள் சனிக்கிழமை மாலையிலும், இரவிலும், கும்பாபிகேஷகத்தன்று ஞாயிற்றுக்கிழமை இரவிலும் தமிழக மற்றும் உள்ளூர் கலைஞர்களின் இசைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தன்று மகேஸ்வர பூஜைக்கு பின்னர் சுமார் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ துர்க்கையின் அருளை பெற்று உய்யுமாறு தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.








