ஈப்போ, ஆகஸ்ட்.02-
இம்மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, மெர்டேக்கா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, Ipoh Old Town-ஐச் சேர்ந்த தமிழரான பாரம்பரிய சிகையலங்காரக் கலைஞர் எம். செல்வராஜ், வீடற்றோர் மற்றும் வசதியற்ற மக்களுக்காக மனிதநேய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில், 100 பேருக்கு இலவசமாக முடி வெட்டும் சேவையுடன், நாசி லெமாக் மற்றும் குடிநீரும் வழங்கப்பட உள்ளது.
தேசிய தினத்தன்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், அதிகமானோர் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் முன்கூட்டியே இந்தச் சேவையை நடத்துவதாக எம். செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமே இந்த மனிதநேய சேவைக்கு ஊக்கமளித்ததாகக் கூறிய அவர், அடுத்த வாரம் முதல் தனது கடையில் Jalur Gemilang தேசியக் கொடியையும் பெருமையுடன் ஏற்றவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.








