பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.02-
மலேசியாவில் ஆங்காங்கே பெரிய அளவில் நடத்தப்படும் மோட்டார் சாகச நிகழ்ச்சிகளில் சாலை பாதுகாப்பை கட்டாய அம்சமாக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் Dzulkefly Ahmad வலியுறுத்தியுள்ளார்.
சமீப காலமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய பல உயிரிழப்பு விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், அவர் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
ஒவ்வொரு வார இறுதியிலும் வாகன ஆர்வலர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளுக்குப் பின்னால், மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகள் வேதனையான நிலையை எதிர்கொள்வதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அது போன்ற நிகழ்ச்சிகளினால் ஏற்படும் உற்சாகத்துக்கு பின்னால், பல குடும்பங்கள் சாலை விபத்துகளால் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்கின்றன என்றும் Dzulkefly Ahmad குறிப்பிட்டுள்ளார்.
சாலை விபத்துகள் மலேசியாவில் மிகப் பெரிய பொது சுகாதார சவாலாக உள்ளதாகவும், போக்குவரத்து அமைச்சின் தரவுகளின்படி நாட்டில் தினமும் சராசரியாக 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகவும் Dzulkefly Ahmad தெரிவித்துள்ளார்.








