அடுத்த 16ஆவது பொதுத் தேர்தலில், பாரிசான் நேஷனலும் பெரிக்காத்தான் நேஷனலும் அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளிட்ட எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஜோகூர் ஜசெக தயாராக இருப்பதாக அதன் தலைவர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
15ஆவது பொதுத் தேர்தலில் ஜசெக வென்ற தொகுதிகளைத் தக்கவைக்க கட்சி முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
எனினும், கடந்த தேர்தல் முடிவுகளை மட்டும் நம்பியிருக்காமல், மக்களின் ஆதரவை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
15ஆவது பொதுத் தேர்தலில் ஜோகூர் ஜசெக லாபிஸ், குளுவாங், இஸ்கந்தர் புத்ரி, கூலாய் மற்றும் பக்ரி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதனிடையே, ஜோகூரில் பாரிசான் நேஷனலும் பெரிக்காத்தான் நேஷனலும் இணைந்தால், பக்காத்தான் ஹராப்பானின் 14 நாடாளுமன்ற தொகுதிகளில் 13 தொகுதிகள் ஆபத்து நிறைந்த அல்லது எச்சரிக்கை நிலையில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.








