கிளந்தான், தும்பாட்டையும், சிலாங்கூர், கோம்பாக்கையும் இணைக்கும் கிழக்குக் கரையோர ரயில் இணைப்பான இ.சி.ஆர்.எல் ரயில் சேவை, அடுத்த ஆண்டு ஜனவரி மாத இலக்கைக் காட்டிலும் ஒரு மாதம் முன்னதாக, இவ்வாண்டு டிசம்பர் மாதமே செயல்படத் தொடங்க வாய்ப்புள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யாமல், சோதனை மற்றும் அங்கீகார நடைமுறைகளை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
இதில், தவறற்ற செயல்பாடு எனப்படும் ஃப்.ஃப்.ஆர். சோதனை முக்கிய கட்டமாகும். பொதுவாக இந்தச் சோதனைக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும் நிலையில், மற்ற நாடுகளின் நடைமுறைகளை ஒப்பிட்டு, அந்தக் காலத்தை குறைக்க முடியுமா என ஆராயப்படுவதாக லோக் தெரிவித்தார்.
இன்று காலையில் கோம்பாக், ஒருங்கிணைந்த பேருந்து மற்றும் எல்.ஆர்.டி. ரயில் சேவை நிலையம் அருகில் உள்ள கோம்பாக் இ.சி.ஆர்.எல் ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்து, இ.சி.ஆர்.எல் ரயில் சோதனை ஓட்டதைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனை குறிப்பிட்டார்.
இ.சி.ஆர்.எல் -ன் அனைத்து 10 ரயில் தொகுப்புகளும் FFR சோதனையை நிறைவு செய்த பின்னரே சேவை தொடங்கும் என்றும், பாதுகாப்பில் எந்தவித ஆபத்தையும் எடுக்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
இதனிடையே, ஒருங்கிணைப்புப் அமைப்பின் பரிசோதனை எனப்படும் எஸ்.ஐ.டி சோதனை இம்மாதம் தொடங்கியுள்ளது. இதில் ரயில்கள், மின்சாரம், சமிக்ஞை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு சோதிக்கப்படுகிறது.
தற்போது ஐந்து இ.சி.ஆர்.எல் ரயில் தொகுப்புகள் மலேசியாவை வந்தடைந்துள்ளன. மீதமுள்ள ரயில்கள் அடுத்த சில மாதங்களில் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது








