எதிர்காலத்தில் மலேசியாவில் இணைய வழி அல்லது மின்னணு வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாரூன் தெரிவித்துள்ளார்.
என்றாலும், மின்னணு வாக்குப்பதிவு முறையை அமல்படுத்துவதற்கு முன்பு விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இந்த முறையின் மீது பொதுமக்களுக்கு ஏற்படும் நம்பிக்கை மற்றும் உறுதி முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இணைய பாதுகாப்பு,தேர்தல் நடைமுறையின் நேர்மை, வாக்குச்சீட்டின் ரகசியத்தன்மை, தேவையான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு முறைகள், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, அமைப்பின் பாதுகாப்பு மற்றும் நேர்மை, அத்துடன் பொதுமக்களின் தயார்நிலை ஆகியவை குறித்தும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக ரம்லான் ஹாரூன் விவரித்துள்ளார்.
மலேசியாவில் தேர்தல்களானது, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் போது நடைபெறுகின்றது.
அதேவேளையில், எதிர்பாராத வகையில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக இடைத்தேர்தல்களும் நடத்தப்படுகின்றன.
தற்போதைய முறையில், வாக்குப்பதிவு நாளன்று தீபகற்ப மலேசியாவில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








