கோலாலம்பூர் செராஸ் பகுதியில், 29 மாடி வர்த்தக கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளால், அதன் அருகில் இருந்த வீடு ஒன்று சேதமடைந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற தம்பதிக்கு 1.3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி அத்னான் அசிஸோன் மற்றும் அவரது மனைவி ஆசியாஹ் அகமத் ஆகியோர், தங்கது வீட்டில் ஏற்பட்ட கடுமையான விரிசல்கள் காரணமாக நான்கு பிள்ளைகளுடன் 10 ஆண்டுகள் வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகினர்.
டெவலப்பர் ஃபேம் மாடுலேஷன் செண்டிரியான் பெர்ஹாட், மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றமான டி.பி.கே.எல் ஆகியவை இணைந்து 1.279 மில்லியன் ரிங்கிட் இழப்பீடும் 1 லட்சம் ரிங்கிட் வழக்குச் செலவும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் வீடு பழுது மற்றும் இடமாற்றச் செலவுக்கு 8 லட்சத்து 19 ஆயிரம் ரிங்கிட்டும், வாடகைக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டும், பொதுவான இழப்பீடாக 3 லட்சம் ரிங்கிட்டும் அடங்கும்.
கட்டுமானத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை அறிந்திருந்தும், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றி திட்டத்தை மீண்டும் தொடர டி.பி.கே.எல் அனுமதித்ததாக நீதிபதி கான் டெச்சியாங் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.








