உட்கட்சி மோதல்களில் சிக்கிக் கொண்டால் பிகேஆர் ஒரு வலுவான கட்சியாக செயல்பட முடியாது என, அக்கட்சியில் இருந்து விரைவில் பதவி விலகவுள்ள அதன் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்துள்ளார்.
மலாக்கா ஆயர் கெரோ-வில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கிய மகளிர் நீதி மற்றும் பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பிரிவாலர் கூட்டு மாநாட்டில் உரையாற்றிய அவர், கட்சிக்குள் தனிக் கட்சி, ஒரே கப்பலை வழிநடத்தும் இரு தலைவர்கள் அல்லது வெளிப்படையான அதிகார அமைப்புக்குப் பின்னால் மறைமுக அதிகார மையம் இருப்பது போன்ற நிலை இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
உட்கட்சி தகராறுகளில் செலவிடப்படும் ஒவ்வொரு மணி நேரமும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு மணிநேரத்தை இழப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தை ஜனநாயகப்படுத்துதல், மக்களுக்கு நன்மை செய்வதில் போட்டியிடுதல் மற்றும் தேர்தல்களில் வெற்றி பெறுதல் ஆகியவற்றிலேயே கட்சியின் முதன்மை கவனம் இருக்க வேண்டும் என்றும் நூருல் இஸ்ஸா அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
பிகேஆர் தேசிய மாநாட்டிற்குப் பிறகு தனது பொறுப்புகளிலிருந்து தற்காலிக விடுப்பு எடுக்க உள்ளதாக நூல் இசா கடந்த வாரம் அறிவித்தார்.
இதனிடையே, முதலில் தனது பதவியிலிருந்து முழுமையாக விலகவே நூருல் இசா விருப்பம் தெரிவித்ததாகவும், இருப்பினும், அவர் தற்காலிகமாக விடுப்பில் செல்ல கட்சியின் மத்திய தலைமைத்துவம் அனுமதி அளித்துள்ளதாக பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








