அமைச்சரவையிலிருந்து ஜசெக விலக வேண்டுமா என்பது குறித்து, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேசிய மாநாட்டில் பினாங்கு ஜசெக பேராளர்கள் தங்களது சொந்த முடிவை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு ஜசெக தலைமைத்துவம், பிரதிநிதிகளுக்கு எந்தவொரு கூட்டு நிலைப்பாட்டையும் திணிக்கப் போவதில்லை என்று மாநில ஜசெக தலைவரும் முதலமைச்சருமான சோவ் கொன் இயோ தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற பினாங்கு மாநிலக் கூட்டத்திலும், அதிகாரப்பூர்வமான எந்த நிலைப்பாடும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸைச் சேர்ந்த சுமார் 400 பேராளர்கள் , ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களுடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. .
அமைச்சரவையிலிருந்து ஜசெக விலகி, ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்பதே வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் பேராளர் மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானமாகும்.
இது தொடர்பாக பிரதிநிதிகள் தங்களது விருப்பப்படி வாக்களிக்கலாம் என்றும், மாநிலத் தலைமையின் எந்தவொரு உத்தரவுக்கும் அவர்கள் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும் சோவ் கொன் இயோ தெரிவித்தார்.
இதனிடையே, பேராக் மாநில ஜசெக, ஒற்றுமை அரசாங்கத்தில் ஆட்சிக்காலம் முடியும் வரை தொடர்ந்து இடம்பெறுவதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








