ஈப்போவில், இல்லாத வரிப் பாக்கியைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, ஓய்வுபெற்ற 60 வயது நபரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரிங்கிட்டை மோசடி செய்ததாக இரு பெண்கள் மீது இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
42 வயது நூர் ஃபாரா சுரினா அஹமட் மற்றும் 33 வயது நூர் ஃபலா நூர்டீன் ஆகிய இரு பெண்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
கடந்த ஏப்ரல் 10 மற்றும் 14ஆம் தேதிகளிலும், ஜூன் 4ஆம் தேதியும், பேரா, கிந்தா மாவட்டம், தாமான் ஈப்போவில் உள்ள விஸ்மா ஹாசில் வருமான வரி கட்டட வளாகத்தில் அவர்கள் இந்த மோசடியை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு வருமான வாரியமான எல்.எச்.டி.என்- னுக்கு செலுத்த வேண்டிய இல்லாத வரிப் பாக்கியைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, இரு பெண்களும் கூட்டு சேர்ந்து, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து முறையே 23 ஆயிரம் ரிங்கிட் , 86 ஆயிரத்து 196 ரிங்கிட் மற்றும் 10 ஆயிரம் ரிங்கிட்டை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








