பெண்ணை மடக்கி கொள்ளையடித்ததுடன் அவருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக, 49 வயது வேலையில்லாத ஆடவர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
லீ கூன் இயூ என்ற அந்த நபர், தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 11.40 மணியளவில், பேரா, பத்து காஜா, தாமான் பத்து காஜா பெர்டானாவில் உள்ள ஒரு வீட்டில், 26 வயது பெண்ணை கொள்ளையடித்ததுடன், அவருக்கு காயம் ஏற்படுத்தியதாக அந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
சம்பவத்தின்போது, அந்தப் பெண் தனது இரண்டு மாத கைக்குழந்தையைத் தூக்கி வைத்திருந்த வேளையில் கையில் குழந்தையை வைத்திருக்கிறார் என்று கூடபாராமல் அந்தப் பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட நபர் காயம் ஏற்படுத்தியதாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அடுத்த விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த நபரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 8 ஆயிரம் ரிங்கிட் ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.








