தெலுக் இந்தான், பிப்ரவரி.13-
கடந்த திங்கட்கிழமை ஜாலான் ஈப்போ-லுமுட் சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் படுகாயமடைந்த மூன்று வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாலை சுமார் 3.35 மணியளவில், புஞ்சாக் ஜெலாபாங் அருகே ஒரு பெரோடுவா கெலிசா காரும், போலீஸ் துறையின் ஹோண்டா சிவிக் ரோந்து வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. முதற்கட்ட விசாரணையின்படி, ஜெலாப்பாங்கிலிருந்து லுமுட் நோக்கிச் சென்ற கெலிசா கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த போலீஸ் காரின் பாதையில் நுழைந்ததே விபத்திற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த Chong Zee Han என்ற 3 வயது சிறுமி, ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அன்று மாலை 4.32 மணியளவில் அவர் உயிரிழந்ததாக உறுதிச் செய்யப்பட்டது. கெலிசா காரை ஓட்டி வந்த 34 வயது பெண்ணுக்கும், போலீஸ் காரில் இருந்த இரு அதிகாரிகளுக்கும் எலும்பு முறிவு மற்றும் உடல் உறுப்புகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.








