கோலாலம்பூர், டிச.3-
தங்க கட்டிகளை பட்டுவாடா செய்யும் ஒரு ஏடிஎம். இயந்திரத்தை திருடியதன் பேரில், அம்பாங் ஜெயா போலீசார் மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.
அந்த ஏடிஎம். இயந்திரத்தில் இருந்த தங்க கட்டிகள் அனைத்தும் , மீட்டுக்கொள்ளப்பட்டு விட்ட நிலையில் அதில் இன்னமும் தங்க கட்டி இருப்பதாக கருதிய அந்த மூன்று நபர்களும், அதனை களாவடிச் சென்று, அதில் ஒன்றுமே இல்லாததைத் கண்டு அதிர்ந்து போயினர்.
தங்க கட்டிகளை வழங்கும் ஏடிஎம்.திட்டம், கடந்த ஆண்டு தொடங்கப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
5 கிராம் தங்கக் கட்டிகளை தரும் வகையில் அந்த ஏடிஎம். இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 23 ஆம் தேதி காலை 9.50 மணியளவில் அந்த ஏடிஎம். இயந்திரம் களவாடப்பட்டது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்த அம்பாங்கில் உள்ள ஒரு பேரங்காடியில் இருந்த அந்த ஏடிஎம். இயந்திரம் வைக்கப்பட்டிருந்த இடத்தை போலீசார் சோதனையிட்டது.
ஒரு லோரியைப் பயன்படுத்தி அந்த ஏடிஎம். இயந்திரம் களவாடப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பில் 17 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர், கோலாலம்பூரில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








