நாட்டின் கல்வித்துறையின் முக்கியத் தூண்களாக விளங்கும் ஆசிரியர்களின் உடல்நலம், மனநலம், பணியிடப் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நலன்சார்ந்த அம்சங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மலாயா தமிழாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் சிலாங்கூரில் பெண் ஆசிரியை ஒருவர் மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆசிரியர்களுக்குத் தேவையான உளவியல் ஆதரவை வழங்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் அதிகப்படியான பணிச் சுமையின்றி நிம்மதியாகப் பணியாற்ற ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்று சங்கத்தின் தேசியத் தலைவர் எம். அர்ஜுனன் முருகையா கேட்டுக் கொண்டார்.
மேலும், ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதோடு, தமிழ்ப்பள்ளிகளின் 'ஆசிரியர் நலன் கண்காணிப்பு கட்டமைப்பை' உருவாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். ஆசிரியர்களின் மன அமைதியே மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் நாட்டின் கல்வி மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.








