மாணவர்கள் பயிலும் பள்ளி எதுவாக இருந்தாலும், அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான ஏதுவான கற்றல் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.
இன்று ஷா ஆலாம், புஞ்சாக் ஆலாமில் நடைபெற்ற SJKC Eco Grandeur பள்ளிக்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள புதிய பள்ளிப் பாடத் திட்டத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக இந்த ஏதுவான கற்றல் சூழல் விளங்கும் என்று குறிப்பிட்டார்.
பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் புதிய பள்ளிகளின் கட்டுமான அனுமதி அதிகரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், இந்த 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 38 புதிய பள்ளிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சுமார் 18 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படும் இப்பள்ளியில் தடையற்ற நடமாட்டத்திற்கான பிரத்தியேக சாய்தள அமைப்பு உட்பட ஆசியாவிலேயே முதன்முறையாகப் பல நவீனப் பாதுகாப்பு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








