சிலாங்கூர், ஜூன் 18-
சிலாங்கூர், காஜாங்-ங்கில், பேரங்காடி ஒன்றிலுள்ள நகைக்கடையில் துப்பாக்கியைக் காட்டி, நகைகளைக் கொளையிட்ட முகமூடி அணிந்த 4 ஆடவர்களைப் போலீஸ் தேடி வருகின்றது.
நேற்று மாலை மணி 3.17 அளவில், சம்பந்தப்பட்ட பேரங்காடியின் முதலாவது மாடியுள்ள நகைக்கடையினுள், பாதுகாவலர் உடையிலும் கையுறைகளை அணிந்திருந்தவாறும் உள்ளே நுழைந்த அக்கும்பல், சுத்தியலைப் பயன்படுத்தி கண்ணாடி பேழைகளை உடைத்து, அதிலிருந்த நகைகளைக் கைப்பற்றியது.
சம்பவத்தின் போது, அக்கும்பல் இரு கைத்துப்பாக்கிகளையும் துப்பாக்கியையும் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.
நகைகளைத் திருடிய பிறகு, அங்கிருந்த கண்ணாடியை நோக்கி ஒரு முறை சுட்ட அக்கொள்ளைக் கும்பல், பேரங்காடி கட்டடத்திற்கு கீழ் உள்ள வாகன நிறுத்துமிடத்தை நோக்கி ஓடியதோடு, அங்கிருந்து தப்பித்து சென்றதாக, காஜாங் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் சூப்பர்டென்டன் முகமது நசீர் த்ரஹ்மன் தெரிவித்தார்.
மொத்த இழப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படுகின்றது. CCTV காணொலி பதிவுகள் ஆராயப்படுவதோடு, சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளர்களிடம் விளக்கமும் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
1971ஆம் ஆண்டு சுடும் ஆயுத சட்டத்தின் கீழ், விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை, அச்சம்பவம் குறித்த தகவலறிந்தவர்கள் போலீசிடம் தெரிவிக்கும்படி முகமது நசீர் கேட்டுக்கொண்டார்.








