கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள KVT தங்க மாளிகையில் நேற்று காலையில் நிகழ்ந்த துப்பாக்கியேந்திய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் நான்கு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சந்தேக நபர்கள் இரண்டு துப்பாக்கிகளுடன் வணிக வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு 21 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ எடையுடைய, 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகளுடன் தப்பிச் சென்றதாக கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் பாசில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அக்கடையில் பணியில் இருந்த பாதுகாப்பு காவலருக்குச் சொந்தமான ஒரு ஷாட்கன் துப்பாக்கியும், ஒரு சுற்று தோட்டாவும் திருடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கானது கூட்டுக் கொள்ளை குற்றத்திற்கான குற்றவியல் சட்டம் பிரிவு 395 மற்றும் ஆயுதத்துடன் கொள்ளை நடத்திய குற்றத்திற்கான பிரிவு 397 கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் பாசில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.








