மலேசிய மனித உரிமைகள் ஆணையமான சுஹாகம் சிறைகள், குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்கள் மற்றும் போலீஸ் தடுப்புக் காவல் போன்ற தடுப்பு மையங்களுக்கு உடனடி அணுகல் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசனைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஹாகமின் கண்காணிப்பு பொறுப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அதன் அதிகாரிகள் தடுப்பு மையங்களை விரைவாக பார்வையிடுவதில் ஏற்பட்டு வரும் தாமதங்களை நீக்குவதற்காக சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் மற்றும் தரப்புகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சட்டசீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தில், செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சுஹாகமின் ஆணையர்களின் அதிகாரத்தையும் மனித உரிமைகள் கண்காணிப்பு செயல்பாட்டையும் வலுப்படுத்தும் வகையில், தடுப்பு மையங்களுக்கு நேரடி அணுகலை அரசாங்கம் வழங்குமா என தெரசா கோக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








