வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் மலாய் வாக்காளர்கள், மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வலியுறுத்தியுள்ளார்.
வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் எடுக்கும் முடிவு தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும் அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாடு தொடர்ந்து ‘தானா மெலாயு’ என்ற அடையாளத்துடன் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் எந்த அரசியல் கட்சி அல்லது அரசு சாரா அமைப்புக்கு ஆதரவாளராக இருந்தாலும், மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
மேலும், மலாய்க்காரர்களின் விசுவாசம் மலாய்க்காரர்களுக்கே இருக்க வேண்டும் என்றும், நமது விசுவாசத்தை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது பிரிவினரிடம் செலுத்தினால் ‘தானா மெலாயு’ என்ற அடையாளத்தை இழந்துவிடுவோம் என்றும் மகாதீர் எச்சரித்துள்ளார்.
' தானா மெலாயு' இல்லையெனில், உலகில் மலாய்க்காரர்கள் தங்களின் அடையாளத்தை இழந்து, தனி நாடற்ற மக்களாக மாறும் நிலை ஏற்படும் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.








