10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசிய கடப்பிதழானது நாடெங்கிலும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஏழு கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 71 கடப்பிதழ் விநியோகிக்கும் அலுவலகங்களில் இந்த புதிய கடப்பிதழானது படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்டமாக, மாநில குடிநுழைவுத் துறை அலுவலகங்கள் மற்றும் நகர்ப்புற உருமாற்ற மையங்கள் உட்பட 14 கடப்பிதழ் விநியோகிக்கும் அலுவலகங்களில் இந்த திட்டம் துவங்கப்படவுள்ளது.
அதன் படி, புதிய கடப்பிதழ் வழங்கும் நடைமுறையானது ஏழு கட்டங்களாக அமல்படுத்தப்படும் என்றும், இது படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் ஜக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற புதிய கடப்பிதழ் அறிமுக விழாவில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இந்த புதிய சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








