வெளிநாடுகளில், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை புரியும் தனிநபர்கள் மீது உள்நாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும், சிறார் பாலியல் குற்றங்களுக்கான சட்டதிருத்த மசோதா 2026, நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் வெளியிட்டுள்ள தகவலில், இந்த திருத்தம் தற்போதைய சட்ட அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் நடக்கும் சிறார் பாலியல் குற்றங்களும் மலேசியாவில் நடந்ததாகக் கருதி, அவற்றை மலேசிய சட்டங்களின் கீழ் விசாரித்து வழக்குப் பதிவு செய்ய இந்த திருத்தம் சட்ட அடிப்படையை வழங்குகிறது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
அதேவேளையில், எல்லை தாண்டிய அமலாக்கம் மற்றும் விசாரணை தொடர்பான நடவடிக்கைகள், ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைத்துலக ஒத்துழைப்பு அமைப்புகள் மூலமாகவே தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத் திருத்தமானது நாடு கடத்தும் சட்டம்1992-இல் இடம்பெற்றுள்ள இரட்டை குற்றத்தன்மை என்ற கொள்கைக்கு துணைபுரியும் வகையில் அமைந்துள்ளது என்றும் குலசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றவாளிகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஒப்படைக்கும் நாடு கடத்தல் தொடர்பான நடவடிக்கைகள், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் தனித்தனியாகவே தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.








