நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்துக்குப் பின்னர், தங்களது உறவுகளைக் காணவில்லை என்ற வேதனையில் ஆயிரக்கணக்கானோர், அவர்களின் புகைப்படங்களை மருத்துவமனை சுவரில் ஒட்டி, ஒரு சிறு நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
சுமார் 25 மீட்டர் நீளமுள்ள அந்தச் சுவரில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் வரிசையாக ஒட்டப்பட்டுள்ளன.
சீனா-நேபாள எல்லையில் இமயமலைப் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 4,500 பேர் காணாமல் போயுள்ளனர்.
அவர்களில் ஒருவரான தனது சகோதரரைத் தேடி வந்த பிரகாஷ் சேத்ரி, அவரது புகைப்படத்தைச் சுவரில் ஒட்டியுள்ளார். அவருடன் சென்ற ஒன்பது யாத்ரீகர்களில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியதாக அவர் கண்ணீருடன் கூறுகிறார்.
“அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை இல்லை… குறைந்தபட்சம் அவரது உடலையாவது கண்டுபிடிக்க வந்திருக்கிறேன்” என்கிறார் மற்றொருவர்.
மருத்துவமனை பிணவறைக்கு அருகிலும் மீட்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. முகங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்தாலும், உறவினர்கள் இன்னும் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
இணையத்திலும், காணாமல் போனவர்களின் தகவல்களைத் தேடும் முயற்சி தொடர்கிறது.
நேபாளத்தின் இந்தச் சுவர்… புகைப்படங்களின் சுவர் மட்டுமல்ல; அன்புக்குரியவர்கள் திரும்பி வருவார்கள் என்ற கடைசி நம்பிக்கையின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.








