நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு நபர் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக நேபாள அதிகாரிகளிடம் மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தலை கோரியுள்ளது.
காட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், அந்தத் தகவலின் உண்மை நிலையை உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நபர் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள், முதலில் அவரது குடும்பத்தினருக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை திரிசூலி பகுதியில், 23 மலேசியர்களும் இடம்பெற்றிருந்த குழுவுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நேபாள நாட்டவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
தகவல் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பொதுமக்களுக்கு தெரிவிக்கத் தகுந்த அடுத்தகட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.








