கோலாலம்பூர் செதாபாக்-வில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 22-ஆவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கு விழுந்ததில் 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
ஜாலான் லங்காவி-யில் உள்ள ரெசிடென்சி தெராத்தாய் குடியிருப்பில் நேற்று காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காலை 8.50 மணியளவில் பாதுகாப்பு பணியாளர் போலீசாருக்கு தகவல் அளித்ததாக வாங்ஸ்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் அனாஸ் சுலைமான் தெரிவித்துள்ளார்.
சி.சி.டி.வி பதிவுகளின்படி, யுனிவர்சிட்டி ஜியோமெட்டிக்கா மலேசியா-வில் முதல் பருவம் பயிலும் மாணவர், பல்கலைக்கழகம் வழங்கிய குடியிருப்புக்கு காலை 7.07 மணியளவில் திரும்பியுள்ளார்.
பின்னர் 22-ஆவது மாடி நடைபாதையில் இருந்து கீழே விழுந்ததாக அனாஸ் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.








