அடுத்த ஆறு மாதங்களில் வங்காள தேசத்தில் இருந்து சுமார் 2 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக வங்காள தேச அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல்வேறு ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலம் கட்டம் கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வங்காளதேச உள்ளாட்சி அரசாங்கம், கிராமப்புற மேம்பாடு மற்றும் கூட்டுறவு இளைய அமைச்சர் மீர் ஷாஹே ஆலம் வெளியிட்டுள்ள தகவலில், இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது செப்டம்பர் மாத இறுதி முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தற்போது சுமார் 8 லட்சம் பதிவு செய்யப்பட்ட வங்காளதேசத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், பதிவு செய்யப்படாதவர்களையும் பதிவு செய்ய மலேசிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் கடன் அடிமைத்தனம் மற்றும் கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வங்காள தேசத்தில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்துவதை மலேசியா கட்டுப்படுத்தி வந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் மலேசியாவிற்கு வருகை புரிந்த வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் -ஐ சந்தித்து, வங்காள தேச தொழிலாளர்களுக்காக மலேசியாவின் தொழிலாளர் சந்தையை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








