குழந்தையைப் பெற்றெடுத்த 24 வயது பெண், பிறந்த குழந்தையின் நிரந்தர பாதுகாப்பை சட்டவிரோதமாக மற்றொருவரிடம் ஒப்படைக்கும் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சுங்கைப்பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
முன்னாள் தொழிற்சாலை ஊழியரான எஸ். கெல்சி என்ற பெண்மணி,செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் 18 முதல் 21-ஆம் தேதி வரை, தனியார் மருத்துவமனை ஒன்றில் தற்போது 12 நாட்களே ஆன தனது குழந்தையின் நிரந்தர பாதுகாப்பை 17 ஆயிரத்து 300 ரிங்கிட்டுக்கு மாற்றும் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டதின் கீழ் கெல்சி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கெல்சிக்கு குறைந்த பிணைத் தொகையை நிர்ணயிக்குமாறு அவரது வழக்கறிஞர் ஆர்.எஸ்.என். ராயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். கர்ப்பமானதிலிருந்து அவர் வேலை இல்லாமல் இருப்பதாகவும், குடும்பத்தை கவனிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வரும் அக்டோபர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.








