கோலாலம்பூர், பிப்ரவரி.08-
அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தங்கள் அமைச்சு அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக வீட்டுவசதி, ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார். நிலம் தொடர்பான விவகாரங்கள் மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்றாலும், இந்தப் பிரச்சனையைத் தீர்க்கத் தேவையான உதவிகளை வழங்கத் தமது அமைச்சு முன்வந்துள்ளது.
அனைத்து வழிபாட்டுத் தலங்களின் கட்டுமானமும் சட்டத்திற்கு உட்பட்டது என்பதோடு, உள்ளூர் அதிகாரிகளிடம் முறையான திட்டமிடல் அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயமாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார். தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள் என மதப் பாகுபாடு பாராமல் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் இந்த விதிகள் சமமாகப் பொருந்தும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். சில வழிபாட்டுத் தலங்கள் நிலச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அந்த இடங்களில் இருப்பதால், அவற்றை முறைப்படுத்துவதன் மூலம் தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டார். பொது அமைதி, போக்குவரத்து, நீர்நிலைப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தகைய கட்டமைப்புகள் இருப்பதை உறுதிச் செய்வது மிகவும் அவசியமாகும். நாட்டின் நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அமைய வேண்டும் என்ற பிரதமரின் கருத்தையும் அவர் வழிமொழிந்தார்.








