கெப்பாளா பாத்தாஸ், ஜூன்.28-
நாட்டில் தற்போது போதைப்பொருள் பயன்படுத்துவோரில் 73 விழுக்காட்டினர் செயற்கை போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையான எஎடிகே தெரிவித்துள்ளது.
இது குறித்து எஎடிகே தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ வெளியிட்டுள்ள தகவலில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வேப் சாதனங்கள் மூலம் செயற்கை போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவது கவலைக்கிடமானதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, போதைப்பொருள் அடிமைத்தனத்துடன் மனநலக் கோளாறும் ஒரே நேரத்தில் ஏற்படும் "இரட்டை நோயறிதல்" சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.
இந்த அடிமைத்தனமானது சிகிச்சை மற்றும் மறுவாழ்வை மேலும் சிக்கலாக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு தின தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோ ருஸ்லின் ஜுசோ, செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.








