சரக்கு போக்குவரத்து நிறுவனங்களின் உண்மையான செயல்பாட்டுச் செலவுகளுக்கு ஏற்ப மானியங்கள் துல்லியமாகச் சென்றடைவதை உறுதி செய்ய, சில வகையான தரை மார்க்க போக்குவரத்து வாகனங்களுக்கான மானிய டீசல் ஒதுக்கீட்டு அளவு மறுஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் செயல்படுத்தப்படவுள்ள இந்த புதிய சீரமைப்பின் கீழ், டீசல் ஒதுக்கீடு என்பது வாகனங்களின் சராசரி பயன்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்காது. மாறாக, வாகனத்தின் மொத்த எடை, எஞ்சின் திறன், லாரிகளின் வகைகள், டீசல் பயன்பாட்டின் அளவு மற்றும் அந்த வாகனங்களின் செயல்பாட்டு முறை போன்ற பல்வேறு தொழில்நுட்பக் காரணிகளை மதிப்பிட்டு புதிய ஒதுக்கீடு நிர்ணயிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.
ஒரே மாதிரியான வாகனமாக இருந்தாலும் அதன் எடையும் சுமக்கும் திறனும் மாறுபடுவதால், அதற்கு ஏற்ப டீசல் பயன்பாடும் மாறுபடும் என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.








