ஜோகூர் மாநிலத் தேர்தலின் எண்டாவ் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளரைக் களம் இறக்குவதன் மூலம், மலேசிய ஓராங் அஸ்லி கட்சி தேர்தல் களம் என்னும் தனது புதிய வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
இன்று மெர்சிங் எண்டாவ் பல்லநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு, இக்கட்சியின் 52 வயது வேட்பாளர் ஜாதி அவாங் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 28,767 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட எண்டாவ் தொகுதியில், இவரை எதிர்த்து பாரிசான் நேஷனலின் அல்வியா தாலிப், பக்காத்தான் ஹராப்பான் சார்பில்
சைஃபுல் நிஜாம் சமாத், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் ஹஸ்னுல் ஹக்கிமி ஹுசேன் ஆகியோர் போட்டியிடுவதால் அங்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜாதி அவாங், "எங்கள் ஓராங் அஸ்லி சமூகத்தின் தேவைகளையும் பிரச்சினைகளையும் மாநில அளவில் இன்னும் திறம்பட எடுத்துரைக்க, எங்களுக்கென்று ஒரு சொந்தப் பிரதிநிதி சட்டமன்றத்தில் இருக்க வேண்டும்; அதற்காகவே இந்தத் தேர்தலில் களம் காண்கிறோம்" என்று கூறினார்.








