கிள்ளான், ஜூன்.28-
16.63 பில்லியன் ரிங்கிட் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஷா ஆலாம் எல்ஆர்டி3 ரயில் சேவையை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய ரயில் சேவையானது செயல்படத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே தினமும் சுமார் 67,000 பயணிகள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையானது, தினசரி 1 லட்சத்து 17,000-திற்க்கும் அதிகமான பயணிகளாக உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது.
பண்டார் உத்தாமாவையும் ஜோஹான் செத்தியாவையும் இணைக்கும் 37.8 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த எல்ஆர்டி3 ரயில் பாதையானது, அந்த வழித்தடத்தை ஒட்டியுள்ள சுமார் 20 லட்சம் மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிப்பதில் மடானி அரசாங்கம் உறுதியாகச் செயல்பட்டு வருவதற்கான மற்றொரு அடையாளமாக இந்த எல்ஆர்டி3 திட்டம் திகழ்கிறது என்று இன்றைய துவக்க விழாவில் உரையாற்றிய அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலம் மக்களுக்கு அதிக பாதுகாப்புடன் கூடிய வசதியான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டார் உத்தாமா முதல் ஜோஹான் செத்தியா வரையிலான எல்ார்டி3 பாதையில் மொத்தம் 20 நிலையங்கள் அமைந்துள்ளன.
அவற்றில் 10 நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டவை.
மீதமுள்ள நிலையங்கள் ஏற்கனவே உள்ள ரயில் வலையமைப்புடன் இணைக்கப்பட்டு பயணிகள் தடையற்ற முறையில் பயணிக்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








