May 21, 2026
Thisaigal NewsYouTube
மூன்று பிள்ளைகள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டது செல்லாது தனித்து வாழும் தாயார் லோ வழக்கில்அப்பீல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

மூன்று பிள்ளைகள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டது செல்லாது தனித்து வாழும் தாயார் லோ வழக்கில்அப்பீல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Share:

தனது மூன்று பிள்ளைகளை இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டது செல்லாது என்று கோரி கடந்த நான்கு ஆண்டு காலமாக சட்டப் போராட்டத்தை நடத்தி வந்த ஒரு தனித்து வாழும் தாயாரான லோ சியு ஹோங், புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

லோ சியு ஹோங் கின் வயது குறைந்த மூன்று பிள்ளைகளும் பெர்லிஸ் மாநில சட்டத்தின் கீழ் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டது அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்றும், செல்லத்தக்கது என்றும் கடந்த ஆண்டு மே மாதம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, அப்பீல் நீதிமன்றம் ரத்து செய்தது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹதாரியா ஷெட் இஸ்மாயில் , அந்த மூன்று சிறார்களும் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டது “ULTRA VIRES” அல்லது கூட்டரசு அரசமைப்பின் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பு அளித்தார்.

பெர்லிஸ் மாநில சட்டத்தின் கீழ் அந்த மூன்று சிறார்களும் மதம் மாற்றப்பட்டது அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்று கோலாலபூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருப்பது மூலம் விசாரணை நீதிபதி தவறு இழைத்துள்ளார் என்று அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹதாரியா ஷெட் இஸ்மாயில் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

மதம் மாற்றப்பட்ட தனது குழந்தைகளுக்காக சட்டப் போராட்டத்தை நடத்திய ஈப்போவை சேர்ந்த இந்திராகாந்தி வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு அப்பீல் நீதிமன்ற நீதிபதிகளான தாங்கள் கட்டுப்படுவதாக நீதிபதி ஹதாரியா ஷெட் இஸ்மாயில் தெரிவித்தார்.

வயது குறைந்த பிள்ளைகளை மதம் மாற்ற வேண்டுமானால், பெற்றோரில் தாய், தந்தை இருவருமே உடன்பட வேண்டும். இணக்கம் தெரிவிக்க வேண்டும். தாய் அல்லது தந்தை என ஒருவரின் இணக்கத்தின் பேரில் பிள்ளைகளை மதம் மாற்ற முடியாது என்று இந்திராகாந்தி வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகத்தெளிவாக உள்ளதாக நீதிபதி ஹதாரியா ஷெட் இஸ்மாயில் விளக்கினார்.

தனது மூன்று பிள்ளைகளும் தனது கணவர் நாகேஸ்வரன் முனியாண்டியினால் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வந்த தனித்து வாழும் தாயார் லோ சியு ஹோங் – கிற்கு இது இரண்டாவது வெற்றியாகும்.

ஏற்கனவே தனது மூன்று பிள்ளைகளும் தனது பராமரிப்பிலேயே இருக்க வேண்டும் என்று கோரி, நடத்திய சட்டப்போராட்டத்திலும் லோ சியு ஹோங் வெற்றிப் பெற்றார்.

Related News