கோலா கிராய், மார்ச்.07-
கிளந்தான், கோலா கிராய் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனை விடுதியில், 29 வயது மதிக்கத்தக்க பயிற்சி மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.55 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் மஸ்லான் மாமட் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த இளைஞர் தனது அறையில் உள்ள குளியலறையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இதில் எந்தவித குற்றச் செயல்களும் கண்டறியப்படவில்லை. உடற்கூறாய்வு முடிவுகளின்படி, கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு 'திடீர் மரணம்' என வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.








