ஈப்போ, டிசம்பர்.27-
கழிவுநீர் சாக்கடைக்குள் தவறி விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் பேரா, தாப்பா, கம்போங் பாரு தானா மாஸில் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படையினர் பிற்பகல் 1.38 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் இடைக்கால உதவி இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.
தாப்பா தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள், சுயநினைவு இழந்த நிலையில் சாக்கடைக்குள் கிடந்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவரை மீட்டனர். அந்த நபரை மருத்துவக் குழு பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது என்று ஷாஸ்லின் குறிப்பிட்டார்.








