ஜோகூர் பாரு, மார்ச்.14-
ஜோகூரில் ஏழு வயது மாணவரை அடித்து காயப்படுத்தியதாகக் கூறி பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, அம்மாணவரின் தந்தை கடந்த செவ்வாய்க்கிழமை காலை போலீசில் அளித்த புகாரையடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.39 மணியளவில் பள்ளியின் உணவகத்தில் இச்சம்பவம் நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அன்று மாலை 4.55 மணியளவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும் ராடின் ரம்லான் தெரிவித்தார்.
கடந்த மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்த பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.








