கோலாலம்பூர், மார்ச்.14-
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் 2026/2027 ஆண்டிற்கான புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற வழக்கறிஞர் மன்றத்தின், 80-வது ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆனந்த் ராஜ், 2024/2025 ஆண்டிற்கான துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது, அப்பதவிக்கு முர்ஷிடா முஸ்தஃபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு அவர் வழக்கறிஞர் மன்றத்தின் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், புதிய செயலாளராக ஆர். ஜெயபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில், பொருளாளராக பீட்டர் டாக்லஸ் லிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, பொதுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் ராஜ், புதிய தலைமைத்துவத்தில், சம்பந்தப்பட்ட பதவி வகித்தவர்களுக்கே, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால், தொடர்ச்சி நிலை காணப்படும் என்று தெரிவித்தார்.
இப்புதிய தலைமைத்துவத்துடன், நீதித்துறையில் சுயேட்சை குரலாக, மலேசிய வழக்கறிஞர் மன்றம் தமது பங்களிப்பை வலுப்படுத்தும் என்றும் ஆனந்த் ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.








