பெட்டாலிங்ஜெயா, நவ. 28-
தன் வசம், 6 ஆயிரத்து 300 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளை வைத்திருந்த ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா டாமாயில் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆசிரியர், போதைப்பொருளுடன் பிடிபட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜப்பார் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு குழுவினர் அந்த ஆசிரியரிடம் சோதனை நடத்திய போது அவர், தன் வசம் 210 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக ஏசிபி ஷாருல்நிஸாம் ஜப்பார் குறிப்பிட்டார்.
அந்த ஆசிரியர், சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் அந்த ஆசிரியருக்கு இதற்கு முன்பு எந்தவொரு குற்றப்பதிவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
விசாரணைக்கு ஏதுவாக 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்த்தின் கீழ் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்களுக்கு அந்த ஆசிரியரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர் என்று ஏசிபி ஷாருல்நிஸாம் ஜப்பார் மேலும் கூறினார்.








